11.25.2012

அழைப்பிதழ் -அவளுக்கு மறுமணம்!!!



கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரென்றால் 
விவாகரத்து தான் அறுவடை நாளோ ?
நம் அறுவடை நாளில் உனக்கு 
தீபாவளி கொண்டாட்டம் !- நான் 
நரகாசுரன் ஆனதை எண்ணித்தான்  நொந்தேன் !



நமக்குள் ஒத்து போகாததால் 
நம் காலம் ஒத்திகையாகிவிட்டது !
போகிற போக்கில் இன்று 
உன் திருமண அழைப்பிதழ் கண்டு 
கண்கள் ஏனோ பனித்தன 
இறுதியாய் ஒருமுறை மன்னித்து விடு !



அழைப்பிதழ் தருவாய் என எதிர்பார்ப்பு ஏதுமில்லை !
தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே  !
ஆம் இனி உன் நினைவுகளை அசை 
போடுவது கூட அநாகரிகம் அல்லவா !



உன் காதில் விழாது என்றாலும் 
நம் அத்தியாயத்தின் முடிவுரை 
எழுதுகிறேன் இருவரும் பயன்பெற 
கேளடி தோழியே !

நீயும் நானும் சரிநிகர் சமானம் 
என்பதை நம் தவறுகள் தானே உணர்த்தியது !
உணர்ந்தாயா என் பார்வையில் நீயும் 
உன் பார்வையில் நானும் குற்றவாளிகள் என்பதை !

புதிய பாதையில் நீ செல்லும் போது 
கவனிக்க வேண்டிய பலகைகள் உண்டு !
முற்று புள்ளிக்கு முன் அதில் சில இதோ ....

எதிர்வாதத்திற்கு அணை போடு 
பிடிவாதத்தை களையெடு 
அன்பு கலை கணக்கின்றி பழகு !
நித்தமும் காதலை நிருபணம் செய் !

தொட்டதும் துலங்கிடும் வரம் 
யாருக்கும் கிடைத்ததில்லை 
தோல்விகளில் சிறகடித்தால் தான் 
சிகரம் தொடமுடியும் !
எனவே பொறுமையும் பழகு!


கட்டிலுக்கு கூட பொம்மைகள் போதும் 
என்னும் காலம் இது -எனவே அவனுக்கு 
புது கவிதையாக பொக்கிஷமாக இரு !
பாதுகாக்க அல்ல ஆராதிக்கவே அழகு  !



என்னால் உனக்கு ஏற்பட்ட 
காயங்களுக்கு இனி மன்னிப்பு எதற்கு ?
ஆயினும் நான் அதில் பாடம் கற்கிறேன் 
இனி எனக்கும் ஒருத்தி விளக்காய் வரலாம் 
அவளுக்கு எரிபொருளாய் இதயம் தந்திடவே !
எனவே நன்றிகளோடும் வாழ்த்துகளோடும் 
உன் திசை மறந்து ,புதிய திசை நோக்கி ........!





2 comments:

  1. எங்கிருந்தாலும் வாழ்க... - இந்த மனசு தான் வேண்டும்... (நீங்களுமா...!)

    வளமுடன் வாழ்க...
    tm2

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !!!
      இது முழுக்க முழுக்க கற்பனையாக ரெண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி அதன் மூலமா படைத்த கவிதை .. நன்றி நன்றி

      Delete